Monday, April 9, 2018

வெள்ளிங்கிரி பயணம்

இயற்கையின் அழகை பெற விடுமுறை சமயங்களில் NP லாரி, பேருந்து, ரயில் (அதிலும் இது மிகவும் ஸ்பெஷல்) , பைக், கார், விமானம் வரை எங்கெங்கோ பயணம் சென்றிருக்கிறேன். நடந்தும் திருப்பதி, சபரிமலை (காலில் அடி பட்டு தையல் பிரித்த ஒரு வாரத்திலேயே), கர்நாடகாவில் ராஜ்குமார் பங்களா அமைத்திருக்கும் மலைப் பகுதி, கரளயம் எனும் பழங்குடி மக்கள் வசிக்கும் பகுதி என அலைந்திருக்கிறேன்.

கடந்த வாரம் வெள்ளிங்கிரி போகலாம் என முடிவெடுத்து மூன்று பேருடன் தொடங்கியது எங்கள் பயணம், அதிலும் என் மாமன் மகன் கிருபா பத்து மாத கர்ப்பிணி போன்றே தொப்பை வைத்திருப்பவன். "நானா? வெள்ளியங்கிரியா? என்ன விளையாடுறியா?" என்றவனை "உடம்புல என்னடா இருக்கு? மனசு பலம் போதும்டா" என வர வைத்தேன். இன்னொருவன் சஞ்சீவ் பக்கத்துக்கு வீட்டு தம்பி. அவன் இதற்கு முன்பு நான்கு முறை ஏறி இருப்பதால் அவனை வரவைத்தேன்.

இரவு ஏழு மணிக்கே மலை ஏற ஆரம்பித்தோம். முதல் மலை முழுவதும் படிகள், சில உடைந்திருக்கின்றன, 1600 படிகள் என வழியில் ஒருவர் தகவல் தந்து உதவினார். முதல் மலையில் உடலில் இருக்கும் மொத்த தண்ணீரும் வெளிவந்து விடுமளவு நன்றாக வியர்க்கும்,  பொறுமையாகவே ஏறினோம், ஒன்றில் நாங்கள் தெளிவாக இருந்தோம், "இந்த மலை எப்போது முடியும் அடுத்த மலை எப்போது ஆரம்பிக்கும்" என்றெல்லாம் கவலைப்படாமல் ஒவ்வொரு படியும் அனுபவித்தே ஏறுவது என்று.
அந்த எண்ணம் இறங்கும் வரை கை கொடுத்தது.

அதற்கு முன் மலை ஏற்றத்தின் போது என்ன தேவை என்பதையும் சொல்லி விடுகிறேன். மாற்று துணி ஒரு செட், ஒரு நல்ல டார்ச், இரண்டு பாக்கெட் ஆரஞ்சு மிட்டாய்கள் (நா வறலாமல் காக்கும்), க்ளுகோஸ் ஒரு பாக்கெட், ஜெர்கின், போர்த்திக்கொள்ள ஒரு போர்வை, இரண்டு லிட்டர் தண்ணீர், சப்பாத்தி அல்லது அதிகம் எண்ணெய் இல்லாத உணவு, உலர் தீனி (திராட்சை போன்று) மலை அடிவாரத்தில் விற்கும் ஊன்றுகோல்.

முதல்மலையின் முடிவில் இருக்கிறது வெள்ளி விநாயகர் கோவில். கல்லும் முள்ளுமாக கிடந்த இந்த மலையை சீராக்கி படிகள் செய்ய உதவியவர் ஒட்டர் என்ற சித்தராம். அங்கே இரு புறமும் கடைகள் இருக்கின்றன, தர்பூசணி பீஸாக தருகிறார்கள், குளிர் பானங்களை விட அவை எடுத்துக்கொள்ளுங்கள், குளிர்பானங்கள் தாகத்தை அதிக படுத்தும்.

அங்கே பதினைந்து நிமிட நேர ஓய்வுக்கு பின் இரண்டாவது மலைக்கு ஏற ஆரம்பித்தோம், மின்சார வசதியில்லாத, சிதிலமடைந்த படிகளின் வழியே நிலவொளியில் மரங்களின் ஊடே காற்றின் தாலாட்டில் நடப்பது சுகம்.

இரண்டாவது மலை கொஞ்சம் படிக்கட்டுகள் கொஞ்சம் வன பாதைகள் என இருக்கிறது, அதன் முடிவில் பாம்பாட்டி சுனை வரும், அங்கே ஒரு சிறிய மூங்கில் வழியாக நீர் பிடித்து கொள்ளலாம், மலை வழியே வரும் அந்த மூலிகை தண்ணீர் நல்ல சுவை கொண்டது, தண்ணீர் தான் உங்களின் உயிர் தோழன், முடிந்த வரை நாக்கை நனைத்து கொள்ள உபயோக படுத்துங்கள், ஒரு மலைக்கு இரண்டு  ஆரஞ்சு மிட்டாயை உபயோகப் படுத்துங்கள்  ஐம்பது ரூபாய்க்கு ஒரு தண்ணீர் லிட்டர் விற்கிறார்கள், மலை ஏற்றத்தில் சுமந்து வருபவர்களுக்கு கூலி கொடுத்து, போலீஸ்காரர்களுக்கு (நாங்கள் கீழே இறங்கி வரும்போது கடமை மிக்க காவல் அலுவலர் கடைக்கு 300 வாங்கி கொண்டிருந்தார்)  லஞ்சம் கொடுத்து கடை வாடகையும் கொடுத்து பிழைப்பு நடத்த வேண்டுமே என கடைக்காரர் ஒருவர் புலம்பினார்.

 பாறைகளுக்கு நடுவில் படிக்கட்டுகள் செதுக்கி பாதை அமைத்திருக்கிறார்கள், வழுக்குப் பாறை என்று பெயர், சிறிது கவனத்துடன் கடக்க வேண்டிய பகுதி, இது போன்ற இடங்களிலே தான் மூன்றாவது காலான மூங்கில் குச்சி அருமையாக செயல்படும். முன்பெல்லாம் கயிறு கட்டி கடந்த இந்த பகுதியை சீராக்கி இப்போது பாதை அமைத்து தந்திருக்கிறார்கள்.

 மூன்றாவது மலை முடிவிலும் நீர் பிடிக்க இடம் உண்டு, அதன் பெயர் கைதட்டி சுனை. அதிலிருந்து குளிர் உங்களை வரவேற்று தழுவிக்கொள்ளும்.
இடையிடையே கடைகள் இருக்கும், மோர் அல்லது தர்பூசணி அல்லது மூலிகை சூப் கிடைக்கிறது, விலை ஒரு மடங்கு அதிகமாக இருக்கும், இருந்தாலும் அங்கெல்லாம் விலையை பற்றி யோசிக்காமல் வாங்குவது புத்திசாலித்தனம். பஜ்ஜி போண்டாவெல்லாம் விற்பார்கள், கீழே சென்று எவ்வளவு வேண்டுமானாலும் சாப்பிடுங்கள் அங்கே வேண்டாம், மலை ஏறுதலின் ஸ்பீட் ப்ரேக்கர்கள் அவை.

அடுத்ததாக வெள்ளை ஜிப்ஸம் மண் நிறைந்த மலையை விபூதிமலை என்று அலைகிறார்கள், திருநீறு போன்றே இருப்பதால் அதை குடைந்து எடுத்து செல்லும் முட்டாள் தனத்தை நீங்களும் செய்ய வேண்டாம், சிவ தரிசம் முடிந்த உடனேயே அங்கேயே விபூதி பொட்டணம் தருவார்கள்.

இங்கெல்லாம் குளிர் காற்றில் தாலாட்டை நன்கு உணர முடியும், வியர்வை வழிய நடக்கும் உடலுக்கு அது தரும் இதம் சுகம்.

காத்தாதி திட்டு எனப்படும் ஐந்தாவது மலை ஏற்ற இறக்கங்கள் கொண்டது. அங்கேயே ஒரு கடை அருகில் கையில் கொண்டு போயிருந்த புளி, தயிர் சாதத்தை முடித்து விட்டு, இரண்டு மணி நேரமாவது தூங்கி விட்டு செல்லலாம் என படுத்துகொண்டோம். ஜெர்கின் போர்வை தாண்டியும் குளிர் ஊடுருவுகிறது, இரண்டு மணி நேர தூக்கத்திற்கு பிறகு பக்கத்துக்கு கடையில் சுக்கு காபி கிடைத்தது, அவ்வளவு குளிரிலும் அத்தனை சூடான காபி வரம். கொதிக்க கொதிக்க ஊதி ஆனந்தமாக அனுபவித்து சாப்பிட்ட அதன் சுவை வாழ்நாள் முழுவதும் மறக்காது.

ஆறாவது மலையை காஞ்சி மாநதி என்றும், ஆண்டி சுனை என்றும் அழைக்கிறார்கள், அதிலிருந்து கீழே இறங்கி போக வேண்டும். நான்கு காலால் இறங்கும் நகைச்சுவை காட்சிகள் எல்லாம் உண்டு.
 நாங்கள் கீழே சென்ற போது நீர் வரத்து குறைவாக இருந்ததால் குளிக்க முடியவில்லை.

அதிலிருந்து ஏழாவது மலை உச்சியில் பரமன் அருகில் நெருக்கும் நேரம் ஆரம்பிக்கிறது. சிறிது தூரம் கடக்கையிலேயே கடவுளைக் காண பக்தர்கள் காத்திருக்கும் கூட்டம் தெரிய ஆரம்பிக்கும். ஏழாவது மலை சற்றே சோதித்தாலும், காணும் இடமெல்லாம் மேகம் உரசும் நிறைவும், இயற்கையின் கண் கொள்ளா பேரழகும் வாரி அணைத்துக்கொள்ளும். சிவன் அருகில் நெருங்க நெருங்க பரவசம் தொற்றிக்கொள்ளும், உச்சியில் வேல்கள் சூழ நடை பாதை அமைத்து வரிசையில் பரமனை காண நிற்க வேண்டியது தான்.

அழுவதெல்லாம் அவமான சின்னமாக நினைக்கும் எனக்கு சிவனை பார்த்த உடனே ஏனோ கண்ணில் நீர் வழிந்து கொண்டே இருந்தது, நிச்சயம் அதில் துக்கமில்லை, பரவசமா, ஆனந்தமா, உச்ச நன்றி உணர்ச்சியா சொல்ல தெரியவில்லை.

சிவனை தரிசித்து விட்டு வந்து அமர்ந்தீர்கள் எனில் அட்டகாசமான சூரிய உதயம் பார்க்கலாம், அதையெல்லாம் எவ்வளவு எழுத்துக்கள் போட்டு எழுதினாலும் நிரப்பவே முடியாது. சோலை சூழ பனிக்காற்று உடல் மீது பரவ, ஆனந்தம் நிரம்பி வழிய, சூரியன் தன் கிரகணத்தை விரிக்கும் நேரம் சொர்க்கம். அந்த அழகின் மயக்கம் தீர மூன்று மணி நேரம் ஆனது.

நீங்கள் ஆத்திகரோ, நாத்திகரோ, இந்துவோ, வேறு மதத்தினரோ அதெல்லாம் ஒரு பொருட்டே இல்லை, உங்கள் உடலையும், மனதையும் வலுப்படுத்த, இயற்கையின் முழு வீச்சை அனுபவிக்க ஏதாவது ஒரு சாதனையை நிகழ்த்தி விட்டதுபோல் பெருமை சொல்ல நிச்சயம் ஒரு முறை வெள்ளியங்கிரி சென்று வாருங்கள்... என் வாழ்நாளில் நான் சென்ற பயணங்களில் மிக சிறப்பான பயணம் என இதைத்தான் கூறுவேன்.

பின் குறிப்பு: எனது மாமன் மகன் கடைசி மலை இறங்கும் பொழுது மிகவுமே சிரமப்பட்டான், மிக மிக மெதுவாக இறங்கினால் போதும் என்றே வந்தோம்... அதிசயம் என்னவெனில் என்னை விட சீக்கிரமாக அவன் இறங்கி விட்டான்.
காலையில் போன் செய்து "என்ன நடந்தாலும் வருடாவருடம் இந்த அற்புதமான பேரழகை தவற விடக்கூடாது, இனி உடல் எடையை குறைத்து விட வேண்டியதுதான்" என தீர்மானமாக சொன்னான்.

சில அறிவுரைகள்:
தயவு செய்து பிளாஸ்டிக் குப்பைகளை, தண்ணீர் பாட்டில்களை போட கடைகளிலேயே ஒரு சாக்கு வைத்திருக்கிறார்கள், அதிலேயே போடுங்கள்.

நடைபாதை நடப்பதற்கு மட்டுமே. மனிதன் என்ற பெயரில் ஒரு சில மிருகங்கள் அதை கழிப்பறையாக உபயோகப் படுத்துகின்றன. அந்த ஆபாச செயலை தயவு செய்து செய்ய வேண்டாம்.

சக மனிதர்களிடம் சண்டை போடும் இடமோ, கெத்துக் காட்டும் இடமோ அதுவல்ல என உணருங்கள்.

 முடிந்தவரை மலை ஏற சிரமப்படும் மனிதர்களுக்கு ஆறுதலாக இருங்கள், என் மாமன் மகன் அதில் சிறப்பு நானே ஏறுறேன் உங்களுக்கு என்ன பாஸ் என குறைந்தது முப்பது பேரிடமாவது சொல்லி உந்துதல் தந்தான்.

கூடுதல் தகவல்கள் :
1) பிப்ரவரி மாத தொடக்கத்தில் (1ம் தேதி)  இருந்து மே மாத இறுதி வரை (30) மட்டுமே செல்ல அனுமதி உண்டு. மற்ற மாதங்களில் வெள்ளிங்கிரி செல்ல இயலாது.

2) ஆண்களுக்கு வயது வரம்பு கிடையாது, பெண்கள் எனில் 13 வயதிற்கு கீழும் 45 வயதிற்கு மேலும் அனுமதிக்கப்படுகிறார்கள்.

கீழ்கண்ட லிங்கில் இந்த மலையை பற்றி முழு தகவலும் ஆங்கிலத்தில் உள்ளது படித்து பயன்பெறுக
https://tamilnadu-favtourism.blogspot.com/2015/10/velliangiri-mountains-coimbatore.html

-நன்றி

No comments:

Post a Comment