Friday, February 23, 2018

ஹரிசுதன்

''இது ரொம்ப ஹிஸ்டாரிக்கல் கோயில். சாமி கும்பிடுமா, கடவுள் நம்பிக்கை உண்டோ?' என்றார் கூடவந்த இன்னொரு தோழர் ஹரிசுதன்.
''நம்பிக்கை உண்டு... மூடநம்பிக்கை இல்லை'' என்றேன்.
''என்னண்ணே திடீர்னு கமல் மாதிரி பேசுறீங்க'' என கமென்ட் போட்டான் அலெக்ஸ்.
''கடவுளே மூடநம்பிக்கைதானே குட்டா...'' எனச் சிரித்த தோழர் ஹரிசுதனை உங்களுக்கு அறிமுகப்படுத்த வேண்டும்.
வேளாண் வளர்ச்சிக்காகவும் இயற்கை வளங்களின் சுரண்டல்களுக்கு எதிராகவும் நடக்கும் அத்தனை போராட்டங்களிலும் தன்னை இணைத்துக்கொள்பவர் ஹரிசுதன். ஒடிஸா மலைக் கிராமங்களை வேதாந்தா நிறுவனம் ஆக்கிரமித்த பிரச்னையில் இருந்து, காவிரி டெல்டாவை விழுங்கும் மீத்தேன் திட்டம் வரை இந்தியா முழுவதும் பயணப்பட்டு போராட்டங்களில் பங்களிப்பவர். ஆறு மாதங்களுக்கு மேலாக சட்டீஸ்கர், ஜார்கண்ட், மேற்குவங்கக் காடுகளில் அலைந்து, அந்த மக்களோடு வாழ்ந்து, அவர்களின் வாழ்நிலையை ஆவணப்படுத்தியவர்.
''மார்க்ஸையும் மசானா ஃபுகோவையும் படிச்சிக் கிழிச்சு வளர்ந்தோமே குட்டா... அதான் மிஸ்டேக். மத்த ஆளுக மாதிரி வேடிக்கை பார்த்துட்டு வீட்டுக்குப் போய் மேட்ச் பார்க்க முடியல. தூக்கம் பிடிக்கல. ஊர் ஊராப் போய் தொண்டை கிழியக் கத்துறோம்... கொடி பிடிக்கிறோம். இதோ பாருங்க... லெஃப்ட் ஷோல்டர்ல, முதுகெல்லாம் பார்த்தீங்களா..! இதே ஊர்லதான்... தாலுக்கா ஆபீஸ் முன்னாடி பைக்ல வந்தவனை இழுத்துப்போட்டு வெட்டினாங்க ஒரு அரசியல் கட்சி ஆளுங்க. நாலைஞ்சு வெட்டு... வெறி புடிச்ச மாதிரி ஓடித் தப்பிச்சேன். ஒரு வெட்டு கழுத்துல விழுந்திருந்தாலும் அவுட்டு. நம்மளால இன்னும் சில காரியங்கள் நடக்கணும் இந்த உலகத்துக்கு. அதான் பொழச்சுவந்திருக்கேன்'' எனச் சிரித்தவரைப் பார்க்க ஆச்சர்யமாக இருந்தது. 
'இதுல ரொம்பப் பெரிய துயரம் என்னன்னா குட்டா... நாம யாருக்காகப் போராடுறமோ, அவங்களே நம்மளை காமெடியனாப் பார்த்துட்டுக் கடந்து போறதுதான். இந்தச் சனம் இப்படித்தான். தீயதுக பின்னாடிதான் போவும்; அபத்தங்களைத்தான் கொண்டாடும்; கெட்டவனைத்தான் ஜெயிக்கவைக்கும். அதுக்காக நாமளும் வேஷம் கட்டிட்டு பவருக்கும் ஷோக்குக்கும் அடிமையாக முடியுமா? அதுக்கு, பீயைத் தின்னுப் பொழைக்கலாம்; இந்த பஜார் பக்கம் ஒரு ஹோம் பிடிச்சு பிராத்தல் பண்ணலாம்; ட்ரக்ஸ் வித்து, ஃபோர்ஜரி, கரப்ஷன் பண்ணி காசு சம்பாதிக்கலாம். அதுக்கா நாம வந்தோம் குட்டா? வாள சொழட்டிட்டே இருக்கவேண்டியதுதான்; போராடிட்டே சாக வேண்டியதுதான்... நம்ம சே மாதிரி, உங்க பிரபாகரன் மாதிரி, கம்பீரமா கண்ணைத் தொறந்துவெச்சுட்டே சாவோம். பெரியார் மாதிரி மூத்திரப்பை சுமந்துக்கிட்டே வில்லன்களை அடிச்சு நொறுக்குவோம். ஏ.கே.ஜி இருந்தார்ல. தோத்தா என்ன? ராஜதந்திரம்னு மக்கள் அரசியலை அடகுவைக்காம, செங்கொடியைப் போத்திக்கிட்டுச் செத்துப்போவோமே? புதிய அரசியல் அதிகாரத்துக்கான அரசியலை முன்னெடுக்கணும். அன்னிக்கு எங்க கட்சி ஆபீஸ்லயே ஒருத்தன் 'அட்ஜஸ்ட் பண்ணிட்டுப் போவணுங்கிறான். காலம் மாறிருச்சுங்கிறான்.’ அறத்துக்கு அட்ஜஸ்மென்ட்டே கிடையாதுடா முட்டாள்'' - சட்டென மௌனமாகித் தீவிர யோசனையில் ஆழ்ந்து திரும்புகிறார்.
''முடியல குட்டா... சுயநலமான தனிமனித வளர்ச்சி, பெருமுதலாளிகள் வளர்ச்சி, அதிகாரக் குவியல் எல்லாம் இந்த நாட்டையும் நம்ம இயற்கை வளங்களையும் தின்னுட்டு இருக்கு. இப்பிடியே கோடுபோட்ட மாதிரி இந்தியா முழுக்கப் போனேன். இங்க காசர்கோட்டுல எண்டோசல்ஃபான். தெரியும்ல... இப்பவும் தலை வீங்கி, குச்சிக்குச்சியா புள்ளைக அலையுதுக. உ.பி மெஹ்ந்திகாஞ்ச்ல எட்டு கிராமங்களை மொத்தமா உறிஞ்சு எடுத்துட்டுப் போயிட்டான் கூல்டிரிங்ஸ் கம்பெனிக்காரன். போராட்டம், பேரணினு அங்கேயே கெடந்தோம். மொத்தத்தையும் உறிஞ்சு ட்ரை ஆக்கிட்டு அப்புறம்தான் விட்டுட்டுப் போனானுங்க. இங்க கேரளா பலாச்சிமடாலேருந்து திருச்சி சூரியூர் வரை அதான் நடக்குது. சோன்பத்ரால தெர்மல் பவர் ப்ளான்ட் போட்டு என்ன பண்ணானுங்க? இப்பவும் அங்கே பொறக்குற புள்ளைக கை கால் வளைஞ்சு பொறக்குதுக. வாத நோய், மென்டல் டிஸ்ஸார்டர், பல்லு பூரா கறைனு மனுஷங்க அவ்வளவு கொடுமையா அலையுறாங்க. ஒடிஸா ஜகத்சிங்பூர்ல கொரியாக்காரன் இரும்பு உருக்கு ஆலை வைக்கிறேன்னு இருபத்தோராயிரம் மக்களை வெளியேத்தினான். அதிகாரத்துல இருக்கிற எவன் கேட்டான், எங்க போய் நின்னுச்சுங்க அந்தச் சனம்? போய் பார்த்தா வயிறு எரியுது. இந்தக் காயல்பட்டினத்துல கெமிக்கல் கம்பெனி வெச்சு, ஊர் மொத்தமும் சுவாசப் பிரச்னை வந்திருக்கு. இப்பவும் போராடிட்டுத்தான் இருக்கோம். என்ன தேசம்டா இது? இந்த ஊர்ல ஒரு அரசியல்வாதி, ஒரு பணக்காரன், ஒரு தொழிலதிபர் பாதிக்கப்பட்டிருக்கானா? ஏழைங்க மட்டும் என்ன எலிங்களா? விடக் கூடாது குட்டா. அடிச்சு இவனுங்களைக் காலி பண்ணிரணும்.'' 

நன்றி: ராஜு முருகனின் ஜிப்ஸி

No comments:

Post a Comment