Monday, June 12, 2017

சற்றேறக்குறைய (சொந்த) சிறுகதை

அசந்து தூங்கிக்கொண்டிருந்த என்னை மாலை 3:55க்கு தர்மபத்தினி எழுப்பி "டைம் ஆகிடுச்சு கிளம்பு" என்றாள். 4 அல்லது 4:05க்கு அவளுக்கு நிறுவன வாகனம் 7 கிலோமீட்டர் தாண்டி வரும், அங்கே அவளை இறக்கி விட வேண்டும். எனக்கு நாலரைக்கு பணி தொடங்கும்.

 "அடிப்பாவி பழி வாங்கிட்டேயே", என்றதற்கு "நல்லா தூங்கிட்டு இருந்தே, அதான் தூங்கட்டும்ன்னு விட்டுட்டேன்" என்றாள். அவசரமாக புறப்பட்டு அவளை கொண்டு போய் சேர்க்க வேண்டியதை எண்ணி வண்டி எடுக்கையில் "ரீசார்ஜ் தீந்து போச்சு, போட்டு விடு" என்றவள்  காலையில் சொன்னது வேறு ஞாபகம் வந்து தொலைத்தது.

 வந்து போட்டு விடலாம் என அதை கிடப்பில் போட்டு விட்டு, வேகமாக நிறுத்தத்தை நோக்கி செல்கையில், "என்கிட்ட காசு இல்ல, போகும்போது தந்துட்டு போ" என்றாள், தலையாட்டி விட்டு பர்ஸை பேண்ட் பாக்கெட்டில்  தடவி பார்க்கையில் அவசரத்தில் மறந்து விட்டு வந்தது தெரிந்தது.
 அந்த வாகனம் மட்டும் போய் விட்டால் பஸ்ஸில் அவளை அனுப்ப  வேண்டும், பத்துபைசா கூட பாக்கெட்டில் இல்லை. திரும்ப வீட்டிற்கு வந்து எடுத்து சென்று பஸ் வைத்து விட வேண்டும். எனக்கும் வேலை நேரம் தாமதமாகும் "இந்த நாள் அநேகமாக நரக நாளா"க மாற தொண்ணூறு சதவீதம் வாய்ப்பு இருக்கிறது.


நல்லவேளையாக நிறுத்தம் வந்த போது அவள் நிறுவன வாகனம் இன்னும் வந்திருக்கவில்லை. "அப்பாடா", என இருந்தது.

மனைவியின் உறவினர் ஒருவரை அங்கு பார்க்க நேர்ந்தது,

"எப்படி வச்சிருக்கீங்க இவளை", என்றார்.
"பேக்ல பத்து பைசா இல்லாம, மொபைல்ல கூட பேலன்ஸ் இல்லாம, சிறப்பா வச்சிருக்கேன்" என்றேன். நல்லவேளை என் தர்மபத்தினியின் பார்வைக்கு நெருப்பில்லை, பொசுங்கி இருப்பேன்.
 கெக்க பேக்கே என சிரிக்க ஆரம்பித்த உறவினர் "எப்பவுமே தமாஸ் தான் தம்பி நீங்க". என்றார்
தமாஸா இது?

No comments:

Post a Comment