Thursday, September 22, 2016

அப்துல் கலாம் பற்றி வினவின் சில கேள்விகள்

அப்துல் கலாம் பற்றி வினவின் சில கேள்விகள்... அதை அப்படியே உங்கள் முன் வைக்கிறேன்...  

பொதுவாக மறைந்த பிறகு ஒருவரை போற்றியே பேச வேண்டும் எனும் எழுதப்படாத நாட்டில் வாழ்கிறோம்.தன்னலம் இல்லாதவர் நேர்மையாளர் எளிமையானவர் மிக சிறந்த அணு விஞ்ஞானி எளிய குடும்பத்தில் இருந்து முன்னேறியவர் ஜனாதிபதி மாளிகையின் தடைகளை தகர்த்தவர் இன்னும் பல பெருமைக்கும் சாதனைக்கும் உரியவர் அந்த மாமேதை என்பதில் பேதம் இல்லை …..

அறிவியல் வழிகாட்டி, இளைஞர்களின் எழுச்சி நாயகர், சிறந்த மனித நேயர், அணுசக்தி விஞ்ஞானி, அக்னியின் அரசன் என்று அப்துல் கலாம் புகழ் பாடும் அன்பு நெஞ்சங்கள், வெகு நாட்களாக நெஞ்சைக் குடைந்து கொண்டிருக்கும் சில கேள்விகளுக்கு விளக்கம் கூறுங்களேன் ..

1. கடந்த 2002ல் குஜராத் கலவரம் என்ற பெயரில் இஸ்லாமியப் படுகொலை நடந்து முடிந்த பின், தனது இஸ்லாமிய எதிர்ப்பு முகத்தை மறைக்க அப்துல் கலாமை ஜனாதிபதியாக பாஜக முன் வைத்த போது, இந்த மனித நேயர், கருவிலிருந்த சிசுவையும் கொன்ற அக்கொலைகாரர்கள் வழங்கிய பதவியை ஏற்றுக் கொண்டது ஏன் ?.

2. தமிழகத்தில் அனைவரும் டாஸ்மாக்கிற்கு எதிராக குரல் கொடுத்த சமயத்தில், வாய் திறக்க மறந்தது ஏன்?

3. “ராமேஸ்வரம் மீனவர்களின் வீட்டில் உண்டு வளர்ந்தவன் நான்”, என்று பெருமைக்கு கூறும் இவர், சிட்டுக் குருவிகளைப் போல் இந்திய மீனவர்களை இலங்கை இராணுவப்படை சுட்டுக் கொன்ற போது ஏதாவது கருத்து சொன்னதுண்டா?.

4. இலங்கையில் சிங்கள இனவெறியர்கள் ஈழத்தமிழர்களைக் கொன்று குவித்த போது, மௌனியானதன் காரணம் என்ன ?.

5. மாணவர்கள தான் இந்தியாவின் எதிர்காலம் என்றவர், தனியார் பள்ளி, கல்லூரிகளின் கட்டணக் கொள்ளைக்கு எதிராக ஏதாவது செய்ததுண்டா?

6. வல்லரசுக் கனவுகென ஏதாவது செயல் திட்டம், அவரது புத்தகத்திலோ அல்லது அரசின் ஆணை வழியாகவோ, அதற்கான செயல்திட்டமாக எதையேனும் வகுத்துக் கொடுத்தாரா ?.

7. கூடங்குளத்தில் மக்கள் பாதுகாப்பு குறித்த பிரச்சினையை முன் வைத்துப் போராடும் போது, உள் நுழைந்த 3 மணிநேரத்தில் அணு உலையை தட்டிப் பார்த்து, அணு உலையில் எந்தப் பிரச்சினையும் இல்லை, பாதுகாப்பானது என்று அறிக்கை விட்டவர்,  அடுத்த மாதமே அணு உலை கோளாறு காரணமாக நிறுத்தி வைக்கப்பட்டது குறித்து கருத்து தெரிவிக்காதது ஏன் ?.
8. யாதும் ஊரே யாவரும் கேளீர்என்று ஐ.நா வில் தமிழை பேசி விட்டு,  20 தமிழர்கள் ஆந்திர போலீசால் சுட்டுக் கொல்லப்பட்ட போது ஏன் குரல் எழும்பவில்லை?.

9. சாய்பாபா, சங்கராச்சாரியார் போன்ற காவி கிரிமினல்களோடு நெருக்கமாக இருந்தது ஏன்?

10. பல இலட்சம் விவசாயிகளின் தற்கொலையைப் பற்றி கேட்டபோது, அதை பற்றி பேசாமல் 2020ல் இந்தியா வள்ளரசாகும் என தப்பித்தது யாருக்காக?

11. நியூட்ரினோ ஆய்வு மையம் என்பது ஜப்பான் மற்றும் அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் நலனுக்கான திட்டம், என்பதும் அது மக்களுக்கு பல பாதிப்புகளை ஏற்படுத்தக் கூடியது என்பது தெரிந்தும், அது ஆபத்தற்றது என்று பிரச்சாரம் செய்ததன் பின்னணி?.

12. தனியார் கல்லூரிகளிலும், தனியார் பள்ளிகளிலும் போய் மாணவர்களைச் சந்திக்கிறேன் என்ற பெயரில் அந்நிறுவனங்களை பிரபலமாக்கியதைத் தவிர அங்கு சாதித்தது என்ன? அந்தக் கல்வி நிறுவனங்கள் இதனைக் காரணம் காட்டி, அதிகக் கட்டணத்தை வசூலித்துக் கொண்டது தெரியுமா?  

13. இவர் காலகட்டங்களிலோ அல்லது அதற்குப் பின்னரோ கூட இந்திய விண்வெளித்துறையும், அணுசக்தித் துறையும் ஏதேனும் ஒரு புதிய தொழிநுட்ப கண்டுபிடிப்பைச் (technological innovation) செய்ததுண்டா?

14. இந்திய மக்களின் வாழ்வை சூறையாடக் கூடியதும் இந்தியாவை
அமெரிக்காவின் நிரந்தர இராணுவ அடிமையாக்குவத்ற்குமான அணுசக்தி -123ஒப்பந்தத்திற்கு வல்லரசுக்கான தேவை என்றது நியாயமா?

15. அரசுப் பள்ளிகள் மூடப்படுவதற்கு எதிராக வாயைத் திறந்து பேசாததன் பின்னணி என்ன ? மக்களின் போராட்டங்கள் குறித்தோ, தனியார் பள்ளி, கல்லூரிகளின் கட்டணக் கொள்ளை குறித்தோ, மாணவர்களின் டாஸ்மாக் சீரழிவுக் கலாச்சாரம் குறித்தோ வாயைக் கூடத் திறக்காத இந்தப் புண்ணியவானுக்கு சரியாகத் தான் பெயர் வைத்திருக்கின்றனர் மக்களின் ஜனாதிபதி என்று கிரிமினல் அரசியல்வாதிகளுக்கும் “மக்களின் முதல்வர்”,  என்று பெயர் வைக்கிறார்களே அதை ஒப்பு கொள்வீர்களாஅதைப் போல தானே இதுவும்?
இங்கு சுட்டிக் காட்டப்பட்ட அனைத்து சம்பவங்களிலும் கருத்து தெரிவிக்க வாய்ப்பு இருந்தும் மவுனம் சாதித்ததால்தான் அப்துல்கலாம் ஊடகங்களால் ஊதிப்பெருக்கப்பட்டு ஏற்கனவே மக்களின் தலையில் ஏற்றப்பட்டிருக்கிறார்.
மக்களின் பிரச்சினைகளுக்காக உண்மையில் களத்தில் நிற்கும் போராளிகள் அப்பிரச்சினை குறித்து உண்மையாக நடந்துகொண்டதால் தான் இதே ஊடகங்களால் இருட்டடிப்பு செய்யப்பட்டனர்.
இப்படி மக்களின் பிரச்சினைகளுக்காக போராட முன் வராதவருக்கு, அன்றாடம் பல்வேறு பிரச்சினைகளில் சிக்கி உழலும் நாம் ஏன் அழ வேண்டும்?
பல நூறு இந்தியக் குழந்தைகள் ஊட்ட்டச் சத்துக் குறைவால் இறந்து கொண்டிருக்கும் ஒரு நாட்டில் வல்லரசுக் கனவைக் காட்டி மக்களை திசை திருப்பியவருக்குபாம்பன் கடலில் சிலையும், ரூபாய் நோட்டில் முகமும், பீச்சில் சமாதியும் தான் நிச்சயம் வேண்டுமா?.
என்ன இருந்தாலும் அவர் தனி மனித ஒழுக்கம் பூண்டவர் என்று பதில் கூறுபவர்களுக்கும், அவர் இறந்து விட்ட சூழலில் இப்படியெல்லாம் பேசக் கூடாது என்று கூறுபவர்களுக்கும் ஒரே ஒரு பதில் தான். ஹிட்லரும் தனி மனித ஒழுக்கம் பூண்டவர் தான், இறந்து விட்டார் தான்  ஹிட்லரையும் நல்லவர் என்று ஏற்றுக் கொள்வீர்களா?

வரலாற்றில் ஹிட்லர் இறந்த பிறகு அவரைப் பற்றி பேசும் போது நல்ல விசயங்களை மட்டுமே பேச வேண்டும் என்றால் இப்படியும் பேசலாம் ஹிட்லர் உணவு விசயத்தில் எந்த உயிரையும் கொன்றது கிடையாது அவ்வளவு நல்லவர் சுத்த சைவம் என்று.
அப்துல் கலாமை தலை மேல் வைத்துக் கொண்டாடும் அன்புடையீர், தயவு செய்து இக்கேள்விகளுக்கு பதில் சொல்லுங்களேன் !!!

இதை 2002 குஜராத் கலவரத்தோடு ஒப்பிட்டுப் பாருங்கள். ஆயிரக்கணக்கான மக்கள் உயிரோடு கொளுத்தப்பட்டு சாகடிக்கப்பட்டு, ஒரு நிறை மாதக் கர்ப்பிணியாய் இஸ்லாமியப் பெண்ணின் வயிற்றைக் கிழித்து கருவில் இருக்கும் சிசுவை வெளியில் எடுத்து அதனை இரண்டாக வெட்டிக் கொன்ற சம்பவங்கள் நடந்து முடிந்த பிறகு, தன் மீது விழுந்திருக்கும் இஸ்லாமிய விரோதி என்ற கறையை துடைப்பதற்காக அப்துல் கலாமை ஜனாதிபதியாக் முன்னிறுத்தினர்.

நடந்த கொடுமைகள் எல்லாம் தெரிந்த பின்னும், அந்தக் கிரிமினல் கூட்டத்தின் முகத்திரையைக் காக்க அப்பதவியை அலங்கரித்தது மட்டுமல்லாமல், அதன் பின்னர் குஜராத்திற்கு சென்று மோடியின் நிவாரணப் பணிகளையும் பாராட்டி விட்டு வந்த கொடுமையை என்னவென்று சொல்வீர்கள்?

இறந்த பின்னர் குற்றம் சொல்லக் கூடாது என்றால், வரலாற்றில் எவரைப் பற்றியுமே முழுமையாகத் தெரிந்து கொள்ள முடியாது போய்விடும் என்பதை உணர்ந்து தான் பேசுகிறீர்களா ?..

அஜ்மல் கசாப் இறந்த பிறகும் இதே ஒழுக்க நெறியை பின்பற்றினீர்களா ?.

#வினவு

No comments:

Post a Comment