Tuesday, September 13, 2016

தேசாந்திரி புத்தக விமர்சனம்

உலகம் எனக்கு என் வீட்டு  ஜன்னல் வழியாகத்தான் ஆரம்பமானது என தொடங்கும் இப்புத்தகம், எஸ் ராமகிருஷ்ணனின் முடிவில்லாத பயணங்கள் வழியாக, தெளிந்த அருவி போல (கவனிக்க, நீர்வீழ்ச்சி அல்ல) சென்று கொண்டே இருக்கிறது.

ஏழு வயதில் ஆரம்பமாகும் ஜன்னல் வழி பார்வை பயணம், ஏறக்குறைய இந்தியாவின் முக்கியமான பகுதிகள் சென்று சேர்க்கிறது. கன்னியாகுமரியின்  கடற்கரையில் கடலை புரிந்து கொள்ளும் அவர், வெயிலோடு கொண்ட உறவுகள் பற்றியும் சிலாகிக்கிறார்.

சாரநாத்தின் பௌத்த ஸ்தலதில் புகை போன்ற பனியை, பனிக்குள் நடக்கும் பிரார்த்தனைகளை, அம்மக்களின் பரவசத்தை, அமைதியை, கண்களால் விழுங்க முடியாத ஸ்தூபியை, சிறிய புத்தர் சிலை விற்கும் சிறுமியை காட்சி பூர்வமாகவே கண் முன்நிறுத்தும் கலை எஸ் ரா விற்கு இயல்பாகவே இருக்கிறது.

 கதை வழியாக மட்டுமே கேட்டு, மறந்தும் போய் விட்ட நல்லதங்காளை, அவள் வாழ்ந்த வாழ்க்கையை, அந்த கிணறை மறக்க முடியாதபடி படைத்திருக்கிறார்.

இந்தியாவின் சிரபுஞ்சிக்கு அடுத்ததாக மழை பொழியும் இடமான லோனாவாலாவின் அறிமுகத்தை அவர் எழுத்தின் வடிவிலேயே தருகிறேன்

"நான் அங்கு சென்று இறங்கிய போதே சாரல், சாலைகள் ஈரத்தில் ஊறி இருந்தன, கட்டடங்கள், வாகனங்கள், தனியே வாலாட்டியபடி நிற்கும் குதிரைகள் என யாவிலும் மழையின் சுவடுகள்...."

"மழையோடு நட்பு கொள்ளாதவர்கள் எவர் இருக்க கூடும் சொல்லுங்கள்?"

இன்னொருமுறை மணியாச்சி ரயில் நிலையம் வழியே நீங்கள் பயணித்தீர்கள் எனில் இந்திய சுதந்திர போரின் முதல் வெடிச்சப்தம் நடந்த பகுதியை நீங்கள் உணர கூடும்.

சென்னையில் உள்ள புனித தாமஸ் மலைக்கும், எவரெஸ்ட்க்கும் என்ன தொடர்பு? 40 வருடங்களாக தொடர்ந்த பணி என்ன? அவற்றால் நிகழ்ந்த வரலாற்று நிகழ்வுகள் என்ன என்பதை படித்து முடித்த பிரமிப்பு இன்னும் அடங்கவே இல்லை.

சங்க இலக்கியம் போற்றி புகழ்ந்த காந்தள் மலர்,  குக்குருவான் பறவை, சாரலின் நெருக்கம், அருவிகளிடம் எப்படி நம்மை ஒப்படைப்பது, கஜிராகோவின் அலைந்து கொண்டே இருக்கும் குளிர், சத்னாவின் அந்த சிறிய வீடு, குஜராத்தின் சபர்மதி ஆசிரமம், கொடைக்கானலில் சாலையோரம் வாலாட்டியபடி நடக்கும் குதிரைகள், சென்னையின் உண்மையான அடையாளம், தவளைகளின் திருமணம் என சிலாகித்து சொல்லிக்கொண்டே போகலாம். வாசகனை கை பிடித்து, தான் உணர்ந்த அழகியலை அப்படியே நூலிருக்குள் கொண்டு வந்து சேர்த்திருக்கிறார் எஸ் ரா.,

 பகுதியின் ஆரம்பத்தில் அழகான கவிதைகள் அதற்க்கு அழகு சேர்க்கின்றன, எடுத்துக்காட்டாக "மழையின் பெரிய புத்தகத்தை யார் பிரித்து படித்து கொண்டிருக்கிறார்கள்,  படிக்கட்டில் நீர் வழிந்து கொண்டிருக்கிறது" என்ற தேவ தச்சன் கவிதையில் ஆரம்பித்து மழையின் முழு சுகத்தை அக் கட்டுரை கொண்டு நிரப்புகிறார், முழுதும் நனைந்து கரைய வேண்டி இருக்கிறது.

மிக பெரிய வெல்ல கட்டியை இழுத்து வந்து இப்புத்தகத்தில் நிறைத்து விட்டீர்கள் எஸ் ரா... மிகுந்த நன்றி...

கட்டாயம் வாசிக்க வேண்டிய சிறந்த புத்தகம் தேசாந்திரி  
       

இந்த விமர்சனத்திற்கு எஸ் ராவின் பதில் மின் அஞ்சல்... மகிழ்ச்சியும், நன்றிகளும்... 




No comments:

Post a Comment