Tuesday, February 16, 2016

மீண்டும் ஒரு ஆரம்பம்

கண்ட கனவுகள் அனைத்தும் 
சரித்திரம் ஆனதாம் – இது
மெய்தானா என நானறியேன்
ஆனால் கேள்வி ஒன்று 
மிச்சம் உண்டு என்னிடத்தில்
யார் கண்ட கனவு இது - என் 
நாட்டின் கலாச்சார சீர்குலைவு!!!
கருவறை தொடங்கி இறைவனின் 
கர்பக்ரஹம் வரை வியாபாரம் ஆனது 
எவரின் கனவாய் இருக்கும் ???
விதையை பிடுங்கி வீசிவிட்டு 
விருட்சத்தை எதிர்பார்க்க 
யார்சொல்லி கொடுத்தது - என் 
தலைமுறை வர்க்கத்திற்கு...
நல்லதொரு வீணையை புழுதியில் 
எறிந்தது இந்த தலைமுறை தானா??? 
விடை தெரியாத கேள்விகளை 
மட்டும் சுமந்துகொண்டு பாரமில்லாத 
மண்ணின் சுமைதாங்கிகளாய் !!! 
தர்மம் அழிந்து அதர்மம் ஓங்கும் 
நேரத்தில் சம்பவமாய் வருவேன் 
என்ற இறைவன் வருவாரா – ஆயின்
வேண்டுகோளும் உண்டு என்னிடத்தில்
சூன்யங்கள் முடிந்து உதயம் 
தொடங்கும் வேளை வரும் போது 
அன்றும் வேண்டும் என் பாரதம்!!!
அக்னி குளியல் கேக்காத ராமன் 
செஞ்சோற்று கடன் கேட்காத துரியன் 
வம்சத்தை அழிக்காத திரௌபதி
வேண்டும் இவர்கள் அனைவரும்... 
முகலாயர்களை உள் அனுமதியாது 
சிந்துவும் ஜீலமும் அரணாய் என்றும்
வேண்டும் என் பாரதத்திற்கு...... 
இரு வேறு துருவங்கள் ஆகாது என் 
பாரதம் முழுதாய் வேண்டும் - அன்று
தீர்க்கதரிசனம் காணும் முண்டாசு கவி 
மீண்டும் பிறப்பான் - வாள் 
ஏந்திய கட்டபொம்மன் மீண்டும் 
உருவெடுப்பான் - தூக்கு கயிறை 
முத்தமிட்ட பகத்சிங் கண்விழிப்பான்
போராட அல்ல - இன்று அவர்கள் 
வாழாமல் விட்ட நிமிடங்களை 
வாழ்ந்து கழிக்க சுதந்திரத்தை 
அனுபவித்து வாழ்ந்து முடிக்க... 
இன்று நாங்கள் வெற்றிடம் என 
விட்டுவிட்ட இடத்தில் எல்லாம் 
வேர்கள் துளிர்க்க வேண்டும் 
“மீண்டும் ஒரு ஆரம்பத்தின் சாட்சிகளாய்”

-இந்து.  


"வானைத்தொட்ட வேள்வித்தீயில் உதித்தவள் அல்ல இருப்பினும் பொசுக்கப்படும் எல்லைகள் மீறப்படும் போது கேள்விக்கணைகளால்" என்று கூறும் இவரை நீங்கள் ட்விட்டரில் பின் தொடர, கீழே உள்ள பெயரை click செய்யுங்கள்  

இவள் வேள்வித்தீ

No comments:

Post a Comment